Thursday, March 28

பகவத் கீதை – 5.29

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

போக்தாரம் யக்ஞ-தபஸாம்
ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்
க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி

Synonyms:

போக்தாரம் — அனுபவிப்பவன்; யக்ஞ — யாகங்கள்; தபஸாம் — தவங்கள்; ஸர்வ-லோக — எல்லா லோகங்களும் அங்குள்ள தேவர்களும்; மஹா-ஈஷ்வரம் — உயர் அதிகாரி; ஸு-ஹ்ருதம் — உற்ற நண்பன்; ஸர்வ — எல்லா; பூதானாம் — உயிர்வாழிகள்; க்ஞாத்வா — என்று அறிந்து; மாம் — என்னை (பகவான் கிருஷ்ணர்); ஷாந்திம் — உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை; ருச்சதி — அடைகிறான்.

Translation:
நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.

Purport:

மாயச் சக்தியின் பிடியில் சிக்கியுள்ள அனைத்து கட்டுண்ட ஆத்மாக்களின், பௌதிக உலகில் அமைதியைத் தேடுகின்றனர். ஆனால் பகவத் கீதையின் இப்பிரிவில் கூறப்பட்டிருக்கும், அமைதிக்கான வழி என்ன என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அமைதிக்கான மிகச்சிறந்த வழி இதுவே, மனிதனின் எல்லா செயல்களையும் அனுபவிப்பவர் பகவான் கிருஷ்ணரே; அவரே எல்லா லோகங்களுக்கும், தேவர்களுக்கும் உரிமையாளர் என்பதால், மனிதர்கள் அவரது திவ்ய சேவைக்கான அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். அவரைவிட உயர்ந்தவர் எவருமில்லை. தேவர்களில் தலைசிறந்தவர்களான சிவபெருமானையும் பிரம்மதேவரையும்விட, அவரே சிறந்தவர். வேதங்களில் (ஷ் வேதாஷ், வதர உபநிஷத் 6.7) முழு முதற் கடவுள்,தம் ஈஷ் வராணாம் பரமம் மஹேஷ் வரம் என்று வர்ணிக்கப்படுகிறார். மாயையின் மயக்கத்தால், காணும் எல்லாவற்றிற்கும் தானே எஜமானன் என்று ஜீவன்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்கள் இறைவனின் ஜட சக்தியால் ஆளப்படுகின்றனர். பகவானே ஜட இயற்கையின் எஜமானர், கட்டுண்ட ஆத்மாக்களோ ஜட இயற்கையின் கடுமையான சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இந்த அப்பட்டமான உண்மையினை உணராதவரை, தனிப்பட்ட முறையிலோ பலபேர் ஒன்று கூடியோ, இவ்வுலகில் அமைதியைக் காண்பது சாத்தியமில்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் அறியப்படுவதாகும். பகவான் கிருஷ்ணரே பரம அதிகாரி, மாபெரும் தேவர்கள் உட்பட எல்லா ஜீவன்களும் அவரது சேவகர்களே. பூரண கிருஷ்ண உணர்வில் மட்டுமே பக்குவமான அமைதியை அடைய இயலும்.

கர்ம யோகம் என்ற பெயரால் பொதுவாக அறியப்படும் இந்த ஐந்தாம் அத்தியாயம், கிருஷ்ண உணர்வின் பயிற்சி விவரமாகும். கர்மயோகம் எவ்வாறு முக்தியளிக்க முடியும் என்ற கற்பனைக் கேள்விக்கு இங்கு பதில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ண உணர்வில் செயலாற்றுவது என்றால் பகவான் கிருஷ்ணரே உயர்ந்தஆளுநர் என்ற முழு ஞானத்துடன் செயலாற்றுவதாகும். இத்தகைய செயல், திவ்ய ஞானத்திலிருந்து வேறுபட்டதல்ல. நேரடியான கிருஷ்ண உணர்வு பக்தியோகம் எனப்படும். ஞான யோகம் என்பது பக்தி யோகத்திற்கு இட்டுச் செல்லும் பாதையாகும். பரம உண்மையுடனான ஒருவனது உறவைப் பற்றிய முழு ஞானத்துடன் செயல்படுவதே கிருஷ்ண உணர்வாகும். மேலும் புருஷோத்தமரான முழு முதற் கடவுள் கிருஷ்ணரைப் பற்றிய முழு ஞானமே அந்த உணர்வின் பக்குவ நிலையாகும். கடவுளின் மிகச்சிறிய அம்சமான ஆத்மா, அவரது நித்தியத் தொண்டனாவான். ஆத்மா மாயையை ஆட்சி செய்ய விரும்பும்போது, அதனுடன் அவன் தொடர்பு கொள்கிறான். இதுவே அவனது பல்வேறு துயரங்களுக்குக் காரணம். அவன் ஜடத்துடன் தொடர்பு கொண்டுள்ளவரை, அதன் தேவைகளுக்காகச் செயலாற்றதல் அவசியம். இருப்பினும், ஜடத்தின் எல்லைக்குள் இருக்கும்போதிலும், கிருஷ்ண உணர்வானது ஒருவனை ஆன்மீக வாழ்விற்குக் கொண்டு வருகிறது. ஏனெனில் ஜடவுலகில் பயிற்சி செய்யப்படும் போதிலும் ஆன்மீக வாழ்வினை இஃது எழுச்சி பெறச் செய்கின்றது. ஒருவன் எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளானோ, அந்த அளவிற்கு அவன் ஜடத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்டுள்ளான். கடவுள் யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை. கிருஷ்ண உணர்வில் அவன் செய்யும் கடமைகளைப் பொறத்ததே அவனது பலன்கள், அக்கடமைகள் புலன்களை அடக்குவதற்கும், கோபம், ஆசை ஆகியவற்றின் தாக்குதலை வெல்வதற்கும் உதவியாக அமைகின்றன. மேற்கூறிய எழுச்சிகளை அடக்கி, கிருஷ்ண உணர்வில் நிலையாக நிற்பவன், உண்மையில் ப்ரஹ்ம-நிர்வாண எனும் திவ்யமான நிலையில் உள்ளான். கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்யும் போது, தானாகவே அஷ்டாங்க யோக முறையும் பயிற்சி செய்யப்படுகிறது. ஏனெனில், யோக முறையின் இறுதி நோக்கம் பக்தியினால் எளிமையாக அடையப்படுகின்றது. அஷ்டாங்க யோக முறையில் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்னும் படிப்படியான வழியில் முன்னேற்றம் அடையப்படுகிறது. ஆனால் பக்தித் தொண்டின் பக்குவத்துடன் ஒப்பிடும்போது, இவை ஒரு முன்னுரையைப் போன்றவை. பக்தித் தொண்டு மட்டுமே மனிதனுக்கு அமைதியை நல்கும். பக்தியே வாழ்வின் மிக உன்னதமான பக்குவநிலையாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question