Friday, April 19

மோக்ஷத ஏகாதசி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

மோக்ஷத ஏகாதசி மகிமை

குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.

மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.

இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.

இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.

சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அந்தணர்களிடம் கூறி என்ன செய்தால் தன் தந்தைக்கு நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று வினவினான்.

மலைமேல் அமையப் பெற்ற ஆஷ்ரமத்தில் குடிகொண்டுள்ள முக்காலம் உணர்ந்த பர்வத முனியே தங்கள் துயர்களைய வல்லவர் என அவர்கள் மன்னனை அங்கே அனுப்பினர்.

அவரை வணங்கிய மன்னனிடம் முனிவர் கேட்டார், “ உன் நாடும் மக்களும் நலமா ?” என்று

“அனைத்தும் நலமே சுவாமி, சமீப காலமாக ஒரு கவலை என்னை வாட்டுகிறது, அதிலிருந்து விடை பெறவே அந்தணர்கள் என்னை இங்கே அனுப்பினர்” என்று மன்னன் கூறினான். கண்களை மூடி மன்னனின் முக்காலமும் பற்றி த்யானம் செய்த முனிவர், பின்வருமாறு கூறினார்: “உன் தந்தை தன் மனைவியிடம் பூசல் கொண்டு அவள் மாத விடாயின் போது அவள் மிகவும் மறுத்தும், அழுதும் விடாமல் வலுக்கட்டாயமாக உடல் உறவு கொண்டு அவளைச் சித்ரவதை செய்தார். அந்தப் பாவமே அவரை நரகத்திற்குத் தள்ளிப் படாத பாடு படுத்துகிறது.”

“முனிவர்களில் சிறந்தவரே! அவரை அந்நரகத்தில் இருந்து விடுவித்து மோக்ஷம் அடையச் செய்வது எப்படி ? என்று மன்னன் வினவினான்.

“மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் மோக்ஷத ஏகாதசி அன்று முழு விரதம் மேற்கொண்டு அதன் பலனை உன் தந்தைக்கு வழங்குவாயானால் அவர் அந்த நரக வேதனையில் இருந்து விடுபட்டு மேல் லோகம் அடைந்து மோக்ஷம் பெற வாய்ப்புள்ளது.” என்று முனிவர் கூறினார்.

இதனைக் கேட்டுக்கொண்ட மன்னன் தன் நகர் வந்து மோக்ஷத ஏகாதசி அன்று ஒழுங்கான முறையில் விரதம் மேற்கொண்டான். தன் மனைவி குழந்தைகளையும் விரதம் மேற்கொள்ளச் செய்தான். பின் அதன் பலனை முறையே தந்தைக்கு அளித்தான். அதனைக் கண்ட தேவதூதர்கள் அவனைப் போற்றி அவன் தந்தையைக் கீழ் லோகத்தில் இருந்து மேல் லோகத்திற்கு உரிய மரியாதையுடன் அழைத்துசென்றனர். அங்கே அவர் விஷ்ணு ஸ்மரணம் செய்து மோக்ஷம் பெரும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்நாளில் விரதம் மேற்கொண்டோர் மோக்ஷம் அடைதல் உறுதி. பாவம் அற்ற தூய நாள் இது. அளவிடற்கரிய பலன் நிறைந்த சிந்தாமணி போன்றது மோக்ஷத  ஏகாதசி விரதம். பாபம் அற்றவர் இவ்விரதம் மேற்கொண்டால், மறுபிறப்பு அற்ற மோக்ஷம் அடைவர்’ இவ்வாறு யுதிஷ்டிரரிடம் விளக்கினார் கிருஷ்ணர்.

பிரம்மாண்ட புராணம் கூறும் மோக்ஷத ஏகாதசி மகிமை முற்றிற்று.

+8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question