( ஆனி – ஆஷாட மாதம் ,கிருஷ்ண பட்ச ஏகாதசி)
ஆஷாட மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை யோகினி ஏகாதசியாககொண்டாடுவர். யோகினி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். இந்த விரதத்தை இருந்தால் அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கும்.மஹாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி, “பரம் பொருளே, நிர்ஜலா ஏகாதசியின் அபார மகிமையப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆடி மாதத்தில். கிருஷ்ணபட்சத்தில் வரும் யோகினி ஏகாதசி, சுத்த ஏகாதசியைப் பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன். ஆகையால், மது என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததால் மதுசூதனன் என்னும் திருநாமம் பெற்ற கிருஷ்ணா, தயைகூர்ந்து விவரமாகசொல்லவும்” என்று கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரை நோக்கி, ஹே மஹாராஜா, உபவாசம் இருக்கக்கூடிய நாட்களிலேயே மிகச்சிறப்பான நாள் ஏகாதசி திருநாள். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் சிறப்பானது ஆஷாட மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் சுத்த ஏகாதசி. இதை யோகினி ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன்பலனாக அவரவரது பாவத்தின் பிரதிபலன்கள் அழிந்து மேலான முக்தியை பெறுவர். அரசர்களில் மேலானவனே, இந்த ஏகாதசியானது, இந்த உலகில் அழியும் பொருட்களின் மீது பற்று கொண்டு மாயைஎன்னும் உலகாயத சமுத்திரத்தின் பாதாளத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை மீட்டு, ஆன்மீகம் (பக்தி) என்னும்கரையின் பால் கொண்டு சேர்க்கும் நன்னாளாகும். மூவுலகிலும், உபவாசம் இருக்கக்கூடிய விரத நாட்களில் இந்நாளேமுதன்மையானதாகும். புராணத்திலிருந்து உனக்கு ஒரு உண்மைக் கதையை சொல்லுகிறேன் கேள் ” என்று கூறி,சொல்லலுற்றார். “தேவர்களின் செல்வத்தைக் காத்து வருபவரும், அளகாபுரி பட்டணத்தை ஆண்டு வருபவரும் ஆன ராஜா குபேரர்,சிவபெருமானிடம் ஆழ்ந்த ஈடுபாடும், பக்தியும் பூண்டவர். அவர் ஹேமமாலி என்னும் யக்ஷனைத் தன்னுடையதோட்டத்தைக் கவனித்து கொள்ளும் பணியில் அமர்த்தினார். ஹேமமாலி, மயக்கும் பெரிய கண்களையுடைய தன்னுடைய மனைவி ஸ்வரூபவதீ மீது தீரா காமவசப்பட்ட காதல் மயக்கத்தில் இருந்தான். ஹேமமாலி, அன்றாடம் குபேரனின் பூஜைக்காக, மானஸசரோவர் ஏரிக்குச் சென்று ஏரியைச் சுற்றிலும் மலர்ந்துள்ளமலர்களை பறித்து வந்து சேர்ப்பிக்க வேண்டும். குபேரன் அம்மலர்களைக் கொண்டு நித்தமும் சிவபூஜை செய்வதுவழக்கம். ஒரு நாள், வழக்கத்திற்கு மாறாக ஹேமமாலி மலர்களை பறித்து முடித்தவுடன் குபேரனது அரண்மனைக்குச்செல்லாமல், நேராக தன்னுடைய மனைவியைக் காணச் சென்றுவிட்டான். மனைவியின் மீதான காதலில், பூஜைக்கு மலர்களை சேர்ப்பிக்கும் பணியை மறந்தே போனான். ராஜனே கேள்! இங்கு ஹேமமாலி தன்னுடைய இல்லாளுடன் இல்லற சுகத்தில் மோகித்து தன்னை மறந்து கிடக்க, அங்குகுபேரன் ஹேமமாலியின் வருகைக்காக வெகு நேரம் காத்திருந்து விட்டு, பின், சிவபூஜையில் தடங்கல் ஏற்படுவதைபொறுக்காமல் கோபம் கொண்டு, தன் காவலாளியிடம் “நீ சென்று ஏன் இந்த கெட்ட உள்ளம் கொண்ட ஹேமமாலி இன்னும் தினசரி பூஜை மலர்களைக் கொண்டு வரவில்லை என்று அறிந்து வா” என்று பணித்தான். காவலாளியும்சென்று உண்மை நிலவரத்தை அறிந்து வந்து அரசர் குபேரனிடம், ‘எங்களுக்கு பிரியமான பிரபுவே, ஹேமமாலி இல்லறசுகத்தில் தன்னை மறந்து கிடக்கிறான்’ என்று மொழிந்தான். அதைக்கேட்ட குபேரன் மிகவும் சினம் கொண்டு ‘உடனே மதியீன ஹேமமாலியை அழைத்து வந்து தன் முன்னால்நிறுத்தும் படி’ கட்டளையிட்டான். தனக்கிட்ட பணியைச் செய்ய மறந்த தவறை உணர்ந்ததோடு அல்லாமல்,காமவசப்பட்டு மனைவியுடன் காதலில் ஈடுபட்டதும் வெளியில் தெரிந்ததால், ஹேமமாலி, குபேரன் முன் மிகவும்பயத்துடனும், நடுக்கத்துடனும் நின்று முதலில் தன்னுடைய வணக்கங்களைத் தெரிவித்தான். கோபத்தால் கண்கள் சிவக்க, ஆவேசத்தால் உதடுகள் துடிக்க, மிகுந்த கோபத்துடன் குபேரன் ஹேமமாலியை நோக்கி – “பாபி, மஹா பாதகம் புரிந்தவனே, நீசனே, காமாந்தகாரகா (காமி), பக்தியின் மேன்மையை உணராதவனே, தேவர்களுக்கு குற்றம் விளைவிக்கும் நடமாடும் அவமானச் சின்னமே, தேவர்களுக்கெல்லாம் தேவரானசிவபெருமானின் பூஜைக்கு பங்கம் விளைவித்த நீ உன் மனைவியைப் பிரிந்து, வெண்குஷ்ட ரோகத்துடன் மிருத்யுலோகத்தில் பிறந்து அல்லல்பட்டு அவதிப்படுவாய். நீ செய்த பாவச்செயலுக்கு அதுவே சரியான தண்டனையும் ஆகும்”என்று சபித்தான். சாபத்தின் விளைவாக ஹேமமாலி அளகாபுரியை விட்டு உடலெங்கும் வெண்குஷ்ட ரோகம் பீடிக்க அவமானத்துடன்பூவுலகில் வீழ்ந்தான். அவன்மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள்.உண்பதற்கும், குடிப்பதற்கு எதுவும் கிடைக்காத, அடர்ந்த, பயத்தைக் கொடுக்கும் வனாந்தரத்தில்கண் விழித்தான். நெடு நாட்கள் இப்படியே துன்பத்தில் சென்றன. இரவுப் பொழுதிலும் வலியால் உறக்கம் வராமல்அல்லலுற்றான். கோடையின் கடுமையான உஷ்ணத்திலும், பனியின் கடுமையான குளிரிலும் தாங்க வொண்ணாஇன்னலுற்றான். இத்தனை துன்பம் அனுபவித்தாலும், சிவபெருமானின் மீதான பக்தி குறையாமல் இடைவிடாதுதொழுது வந்தான். அதனால் அவனது புத்தி தடுமாறாமல், செய்யும் காரியத்தில் நிலைத்து இருந்தது. செய்தபாபகர்மத்தினால் விளைந்த சாபத்தின் காரணமாக இன்னலுற்றாலும், சிவபெருமானிடம் கொண்ட பக்தியால், தன்முந்தைய பிறவியை பற்றிய நினைவு மாறாமல் இருந்தது. இப்படியே பல நாட்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து , மலை, வனாந்தரம், சமவெளி ஆகியவற்றை கடந்து,ஹேமமாலி பிரம்மாண்டமாகப் பரவி நிற்கும் இமாலய பர்வதத்தை அடைந்தான்.
அங்கு அதிர்ஷ்டவசமாய் அவனுடைய சிவபக்தியின் பலனாக, மஹாதபஸ்வியான ரிஷி மார்க்கண்டேயரின் ஆசிரமத்தைக் கண்டான். ரிஷிமார்க்கண்டேயரை, பிரம்மாவின் பிரதிபிம்பம் என்றே கூறுவர். அவரது ஆசிரமமானது பிரம்மசபை போன்று அழகுறவிளங்கியது. ஆசிரமத்தில் ரிஷி மார்க்கண்டேயர், தன் ஆசனத்தில் மிகவும் பொலிவுடனும், தேஜஸூடனும் மற்றுமொரு பிரம்மதேவன் போல் அமர்ந்திருக்க, ஹேமமாலி பாவம் செய்த குற்ற உணர்ச்சியால் வெட்கப்பட்டு தூரத்தில் நின்றுகொண்டு,ரிஷிக்கு தன்னுடைய பணிவான வணக்கத்தையும்,வந்தனத்தையும் செலுத்தினான்.பிறர் நலனில் அக்கறை கொண்டு, அவர் துயர் துடைக்கும் மனிதாபிமானம் மிக்க ரிஷி மார்க்கண்டேயர், குஷ்டரோகியாக தோற்றத்தில் இருக்கும் ஹேமமாலியைக் கண்டார். அவனை அருகில் அழைத்து, “நீ என்ன பாவம்செய்து, இத்தகைய கொடிய துன்பத்தை அடைந்தாய் என்று வினவினார்.இதைக் கேட்டவுடன் ஹேமமாலி, வேதனையுடனும் வெட்கத்துடனும் பதிலளித்தான். “முனி ஸ்ரேஷ்டரே, நான்,குபேரபுரியை ஆட்சி செய்யும் யக்ஷ ராஜன் குபேரனின் பணியாள். என் பெயர் ஹேமமாலி. என் எஜமான் குபேரனின் அன்றாட சிவபூஜைக்காக, மானசரோவர் ஏரிக்கரையிலிருந்து பூஜைக்கான மலர்களை தினமும் பறித்து வந்து சேர்ப்பதுஎனக்கு இட்ட பணியாகும். ஒரு நாள் காமம் தலைக்கேற எனக்கிட்ட பணியை மறந்து மனைவியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு தாமதமாக மலர்களை கொண்டு சேர்ப்பித்தேன். தாமதத்தின் காரணத்தை அறிந்த என் எஜமானன் குபேரன்,மிகுந்த சினத்துடன் சிவபூஜைக்கு பங்கம் விளைவித்த என்னை சபித்தார். அவரது சாபத்தின் விளைவால் நான் இந்தத்தோற்றத்தில் தங்கள் முன் நிற்கிறேன். சாபத்தின் விளைவால் என் வேலை, வீடு, மனைவி அனைத்தையும் இழந்து மீளும் வழி தெரியாது அலைந்து கொண்டிருக்கிறேன். ஏதோ என் முன் ஜென்ம நல்வினைப் பயன் காரணமாக தவசிரேஷ்டரான தங்களைக் காணும் பேறு பெற்றேன். தங்களை கண்டதும் நல்வழி பிறக்கும் என்று நம்பிக்கைஏற்பட்டுள்ளது. பக்தர்களின் துயர் தாளாது கருணையுடன் அவர்களது துயரை துடைக்கும் பக்தவத்சலா, மற்றவர்களின் நலத்தையே குறிக்கோளாக மனதில் கொண்ட புண்ணியசீலரே, தயைகூர்ந்து நான் இந்த சாபத்திலிருந்து மீளும்வழியை அருளி உதவுங்கள்!” என்று வேண்டி நின்றான். கருணை மிகுந்த மார்க்கண்டேயர் இதைக் கேட்டவுடன், ஹேமமாலி வருத்தப்படாதே, நீ மறைக்காமல் உண்மை உரைத்ததால், உனக்கு மிகுந்த நல்பலனை அளிக்கும் ஏகாதசி விரத நாளை பற்றி கூறுகிறேன் கேள். நீ ஆஷாடமாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியன்று அதன் விதிமுறைப்படி உபவாசம் இருந்து விரதத்தைகடைபிடித்தால் பகவான் மஹாவிஷ்ணுவின் அருளுக்குப் பாத்திரமாகி உன்னுடைய சாபத்திலிருந்து விடுபடலாம்” என்றார்.இதைக் கேட்டதும் நன்றி உணர்ச்சியுடன் ரிஷி மார்க்கண்டேயரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துநமஸ்கரித்து நன்றியையும், வணக்கத்தை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான் ஹேமமாலி. ரிஷி, தன்னை நமஸ்கரிக்கும் ஹேமமாலியை கைதூக்கி எழுப்பி, அவனுக்கு அருளாசி வழங்கி அனுப்பினார். ஹேமமாலி, விவரிக்க இயலாத ஆனந்தம் ததும்ப ஆசிரமத்திலிருந்து வெளியேறினான். ரிஷி மார்க்கண்டேயர் சொல்லியபடி, ஹேமமாலியும் ஆஷாட மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதத்தை அதற்குரியவழிமுறைகளின்படி கடைபிடித்தான்.
அதன் பலனாக சாபம் விலகி, தன் அழகான யக்ஷ தோற்றத்தைப் பெற்றதோடுமட்டுமல்லாமல், இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று வீடு திரும்பி, தன் மனைவியுடன் சந்தோஷமாகவாழலானான்.தர்மத்தை தவறாது கடைபிடிக்கும் யுதிஷ்டிரா, யோகினி ஏகாதசி விரதத்தின் மஹிமையும், அதன் சுபபலன்களையும் பற்றி அறிந்து கொண்டாய். யோகினி ஏகாதசி விரத உபவாசம், எண்பத்தெட்டு ஆயிரம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது. எவரொருவர் இப்புண்ணிய நாளில் விதிமுறைப்படி விஷ்ணு பூஜை செய்து, உபவாச விரதத்தைக் கடைபிடிக்கிறாரோ, அவர் ஏகாதசி தேவியின் அருளால் தங்களுடைய பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று புண்ணிய பக்திமான் ஆவார்.மஹாராஜனே, நீ கேட்டபடி ஆஷாட மாத கிருஷ்ணபட்ச ஏகாதசியின் புண்ணிய மஹிமையை விவரித்துள்ளேன்” என்றுமுடித்தார்.பிரம்ஹ வைவர்த்தன புராணம் ஆஷாட கிருஷ்ணபட்ச ஏகாதசி அதாவது யோகினி ஏகாதசி என்று அழைக்கப்படும்ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.