Saturday, July 27

Lord Chaitanya at Srirangam Pastime (Tamil) / ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

birth

 ஸ்ரீ கிருஷ் சைதன்யா நதியா மாவட்டம் நவத்வீப நகரத்தில் மாயாப்பூரில் உள்ள தலைசிறந்த பிராமண இல்லத்தில் ஜகந்நாதமிஸ்ரார் , மற்றும் சச்சி தேவியின் மைந்தனாக 1407 –ம் ஆண்டு சக சகாப்தம் தற்கால கணக்கின் படி 1486 –ஆம் ஆண்டு பால்குண பௌர்ணமி ( பங்குனி உத்திரம் ) நன்னாளில் அவதரித்தார் .
          இருபத்திநான்கு வருடங்கள் நவத்வீப நகரிலேயே தனது பால்யலீலைகளையும் , பாண்டித்ய லீலைகளையும் இனிதே நிகழ்த்திய ஸ்ரீசைதன்ய மகாபிரபு அதன்பிறகு சந்நியாச ஆஸ்ரமத்தை மேற்கொண்டு பூரிக்குச் சென்று தங்கினார் .

இச்சமயத்தில் தான் அவரது தென் இந்திய பயணம் ஆரம்பமாகின்றது . தென்இந்திய பயணத்தின் போது அவர் எண்ணற்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தந்து தமது திருப்பாதங்களை பதித்தார் . அவ்வாறு வரும் போது அவர் புனித காவிரிக்கரையில் அமைந்துள்ள வைகுண்ட க்ஷேத்திரமான ஸ்ரீரங்க ஷேத்திரத்தை அடைந்தார் . காவிரியில் நீராடிய சைதன்யர் ரங்கநாதரின் ஆலயத்தை நோக்கி தனது பணிவான வணக்கங்களை சமர்ப்பித்தபின் ரங்கநாதரை தரிசிக்க வந்த அவர் பரவச நிலையில் ஆடிப்பாடி சங்கீர்த்தனம் புரிவதைகண்ட அனைவரும் திகைத்து நின்றனர் . அதன்பின் வேங்கட பட்டர் என்ற வைஷ்னவர் தனது இல்லத்திற்கு அழைக்க மகாபிரபுவும் அழைப்பை ஏற்றுக் கொண்டார் . அப்போது சதுர்மாஸ்யம் தொடங்க இதைக்காரணம் காட்டி வேங்கடபட்டர் தனது இல்லத்திலேயே நான்கு மாதங்களும் தங்கி கிருஷ்ணலீலைகளை கூறி கருணையுடன் தம்மை விடுவிக்க வேண்ட மகாபிரபுவும் சம்மதித்து தங்கினார்.

 நித்தமும் காவிரியில் நீராடி ரங்கநாதர் ஆலயத்தில் ஆடிபாடிய மகாவிரபுவின் பரவசநிலைகளின் உன்னத மகிழ்வை கண்ட மக்கள் பேரின்பத்தை எய்தினர் . ஆலயத்தில் தினமும் பிராமணர் ஒருவர் பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் தொடாந்து படித்தாலும் பிழையுடன் படிப்பதை கண்டு அனைவரும் எள்ளி நகைத்தனர் . இருப்பினும் அவர் மனம் தளராது படிப்பதை கண்ட மகாபிரபு பிராமணரின்பாவத்தை உணர்ந்து மிகவும் மகிழ்ந்து அவரிடம் வினவ அவரோ நான் கல்வி அறிவற்றவனாகினும் என் குருவின் ஆணைப்படி தொடர்ந்து படித்து வருகின்றேன் . கீதையை காணும் போதே கிருஷ்ணர் ரதத்தில் அமர்ந்து அர்ஜீனனுக்கு உபதேசித்துக்கொண்டு இருப்பதைக்கண்ணுற்று அவரது அழகில் மனம் மயங்குகின்றேன் ன்ற உடனே மகாபிரபு அவரை ஏற்று இதுவே பகவத்கீதையின் உண்மைப்பொருள் என்று கூறி தனது பகவத்ரூபத்தை காட்ட பகவானே நேரில் வந்திருப்பதை கண்டு அவரது பாதங்களில் பணிந்து நான் எல்லையற்ற ஆனந்தத்தை அடைந்தேன் என்று கூறி மகிழ்ந்தார் . மகாபிரபு ஸ்ரீராபாத்தில் இருந்த நான்கு மாதங்களும் அவருடனேயே இருந்து மகிழ்வுற்றார் .

இச்சமயத்தில் வேங்கடபட்டரின் இல்லத்தில் தங்கியிருந்து வேங்கட பட்டருடன் உரையாடி மகிழ்ந்தார். இராமனுஜ சம்பரதாயத்தை சேர்ந்தரான வேங்கடபட்டர் லக்ஷ்மிநாராயண விக்கிரகத்தை முறையுடன் வழிபடுவதைகண்டு மகாபிரபு மகிழ்ந்தார். மகாபிரபு பட்டாச்சார்யரிடம் உமது லக்ஷ்மிதேவியானவள் எப்போதும் நாராயணரின் மார்பில் குடிகொண்டுள்ள உத்தமபதிவிரதையாவாள். அவ்வாறு இருந்தும் ஏன் அவர் இடையர் குலத்தவனாகிய கிருஷ்ணருடன் உறவு கொள்ள விரும்புகின்றாள் ? கிருஷ்ணருடன் உறவு கொள்வதற்காக லக்ஷ்மியானவள் வைகுண்ட சுகங்களை தவிர்த்து கடும்விரதங்களையும் , தவங்களையும் மேற்கொள்வதேனோ ?

 மகாபிரபுவே மீண்டும் கூறினார் . லக்ஷ்மிதேவியால் கடுந்தவங்களை மேற்கொண்டும் கூட தொடமுடியாத பாதங்களை காளிங்கன் மீது பட்டதற்காக அவர்புரிந்த நல்விணை எதுவோ ? என்று காளிங்கனின் மனைவிகள் கூறுவதை நினைவு கூர்ந்தார்.

 அதற்கு வேங்கடபட்டர் பதிலுரைத்தார் . ” கிருஷ்ணரும் , நாராயணரும் ஒருவரேயாகிலும் கிருஷ்ணலீலைகள் இனிமையும் , சுவையும் மிக்கதாகும் . மேலும் கிருஷ்ணரும் , நாராயணரும் ஒருவரேயாதலால் கிருஷ்ணருடன் லக்ஷ்மிவிரும்பும் உறவானது அவளது பதிவிரத்தன்மையை கெடுப்பதில்லை . அதனால் அவள் கிருஷ்ணருடன் மகிழ்வை அனுபவிக்க விரும்புகின்றாள் . மேலும் கிருஷ்ணரே தன்னை நாராயணராக விரிவடைய வைத்துள்ளதால் இதில் தவறேதுமில்லை . மேலும் பதிவிரதையான லக்ஷ்மிதேவி கிருஷ்ணருடன் ராஸ் லீலைகளில் ஈடுபடுவதற்கு தகுதியானவளே. செல்வத்தின்தேவியான தாய் லக்ஷ்மியானவனள் கிருஷ்ணருடனும் ஆனந்தத்தை அனுபவிப்பதில் தவறேதுமில்லை நீங்கள் இதை ஏன் இவ்வாறு ஏளனமாக பேசுகின்றீர்  என்று வினவினார் ? உடன் மகாபிரபு பதிலுரைத்தார்” ” , இதில் தவறேதுமில்லை இருப்பினும் லக்ஷ்மியால் ராச நடனத்தில் பங்குகொள்ள முடிவதில்லை என்பதையும் நான் வேதங்களிலியிருந்து கேள்விப்பட்டு இருக்கிறேன்.

2016 10image 08 18 158468028raslila ll
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ராஸ-லீலை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ராஸ-லீலையில் கோபியர்களுடன் நடனமாடிக்கொண்டு இருக்கும் பொழுது . கோபியர்கள் பகவானின் கரங்களால் தழுவிக்கொள்ளப்பட்டனர் . இந்தவரப்பிரசாதமாவது லக்ஷ்மிதேவிக்கோ அல்லது ஆன்மீக உலகிலுள்ள மற்ற நாயகிகளுக்கோ – கூட ஒருபோதும் அருளப்படவில்லை. உண்மையில் தாமரை மலரையொத்த தேகக்காந்தியையும் , நறுமணத்தையும் உடைய மிகவும் அழகிய சுவர்க்கலோகப் பெண்களால் இது கற்பனை செய்துகூட பார்க்க முடிவதில்லை . எனவே பௌதீக மதிப்பீட்டுப்படி மிகவும் அழகுடைய இகலோகப் பெண்களைப்பற்றி என்னவென்று சொல்வது ?’ என்று பாகவத ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.

ஆயினும் உமது தேவியானவள் ஏன் ராஸ நடனத்தில் பங்குபெற முடிவதில்லை என்பதை கூறுவீராக . வேதங்களால் கூட கிருஷ்ணருடன் உறவுகொண்டு ராஸலீலைகளில் பங்கு கொள்ள முடிகின்றது.

 ” யோகத்தில் நிலைபெற்றுள்ள முனிவர்கள் மூச்சடக்கம் , மனக்கட்டுப்பாடு மற்றும் புலனடக்கம் , ஆகியவற்றினால் யாரை வழிபடுகின்றனரோ அதே பரப்பிரம்மனை பகவானின் பகைவர்களும் , அவரை இடையறாது நினைப்பதன் மூலம் அடைகின்றனர் . அதுபோலவே பொதுவாக உங்களை சர்வ வியாபகமுடையவராகக் காணும் சுருதிகளாகிய நாங்களும் சிறந்த பாம்பு போல் உருண்டு திரண்டு நீண்டுள்ள உமது கைகளிடமுள்ள கவர்ச்சியின் காரணத்தினால் , உமது மனைவியரால் சுவைத்து அனுபவிக்க முடிந்த உமது அதே திருவடி அமுதை அடைவோம் . ஏனெனில் எங்களையும் உமது மனைவியரையும் நீங்கள் ஒரே மாதிரி பார்க்கிறீர்கள்.

 வேத விளக்கங்களை மகாபிரபு மேற்கோள் காட்டி விவாதித்த போது வேங்கப்பட்டர் தமது நிலையை உணர்ந்து பிரபுவிடம் பணிந்தார் . ” என்னால் உமது மாபெரும் எல்லைக்குள் நுழைய இயலாது. நான் மிகவும் அற்பமான மானிடனாவேன் எனது குறுகிய அறிவால் பகவானின் லீலைகளின் பெருங்கடலுக்குள் ஆழமாக செல்ல இயலாது என்பதையும் தெரிவிக்கின்றேன், நீரே பரமபுருஷராவீர். நீரே கிருஷ்ணராவீர். உமது லீலைகளின் ஆழத்தை உம்மால் தான் உணர முடியும் என்றார்.

உடனே பிரபு பதிலுரைத்தார், “பிரபுகிருஷ்ணர் உன்னத குணங்களை உடையவராவார். அவர் தனது பிரேமையால் அனைவரின் இதயங்களையும் வசீகரிப்பவராவார்.

அவரது பாதச்சுவடுகள் நித்தியமாய் இருக்குமிடமே கோலோக விருந்தாவனம் அல்லது வ்ரஜலோகம் என்றறியப்படுகிறது. கிருஷ்ணரின் தாமரைப்பாதங்களை முற்றிலும் சரணடைந்தவர்களால்தான் இவ்விடத்திற்குள் நுழையமுடியும். இருப்பினும் இங்குள்ளவர்கள் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என்பதை அறிந்ததில்லை.

அவர்கள் கிருஷ்ணரை தமது மைந்தனாக எண்ணி , சில நேரங்களில் அவரை உரலில் கட்டிப்போடுவர் . மேலும் சிலர் அவரை நண்பனாக கருதி அவரை வெற்றி கொண்டதாக எண்ணி அவரது தோள்களில் ஏறி அமர்ந்து விளையாடுவர்.

வ்ரஜவாசிகள் அவரை நந்தனின் மைந்தன் என்றும் , வ்ரஜபூமியின் நாயகன் என்றுமே எண்ணிய அவர்கள் பகவானுடனான தமது உறவைதவிர வேறெதன் மீதும் வனம் செலுத்தவில்லை .

நந்தனின்மைந்தனை எண்ணி வ்ரஜவாசிகளின் அடிச்சுவட்டை பின்பற்று பவர்களால்தான் வ்ரஜத்தை அடைய முடியும்.

சைதன்ய மகாபிரபு மேலும் குறிப்பிட்டார் , ‘ தாய் யசோதையின் மகனான பவான் ஸ்ரீ கிருஷ்ணர் , தன்னிச்சையான அன்புத் தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்கு சுலபமாக அடையக்கூடியவராவார் . ஆனால் மனக்கற்பனை வாதிகளுக்கும் , கடுந்தவங்களாலும் , விரதங்களாலும் தன்னுணர்வு பெறப் போராடுபவர்களுக்கும், உடலையே தான் என்று கருதுவர்களுக்கும் அவர் அவ்வளவு சுலபமாக அடையப்படக்கூடியவரல்ல.

அங்கீகரிக்கப்பட்ட வேத இலக்கியங்களாக கருதப்படும் சுருதி கணங்களும் கூட கோபிகைகளின் அடிச்சுவட்டை பின்பற்றியே கிருஷ்ணரை வழிபடுகின்றன. இதன் மூலம்  தூய்மையடைந்த வேதங்கள் கோபியின் உடலை ஏற்று வ்ரஜபூமியில் பிறப்பெடுக்கின்றன . இத்தகைய உடல் பெற்றவர்களால் தான் பிரபுவின் ராஸலீலை நடனத்தில் பங்குபெற முடிகிறது.

கிருஷ்ணர் இடையர்குலத்தையே மிகவும் நேசிப்பவராகவும் , கோபிகைகளைய மிகவும் பிரியமான காதலிகளாகவும் கிருஷ்ணர் எண்ணுகிறார் . மற்றபடி மூவுலகங்களின் அதிரூபசுந்தரியாலும் கூட கிருஷ்ணருடனான உறவை மேற்கொள்ள இயலாது.

 லக்ஷ்மி தேவியானவள் கிருஷ்ணருடன் உல்லாசிக்க விரும்பும் அதே நேரத்தில் தனது ஐஸ்வர்ய வடிவையும் நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகின்றாள் . ஆகையால் கிருஷ்ணரை வழிபடும் கோபியர்களின் அடிச்சுவட்டை அவளால் பின்பற்ற முடிவதில்லை.

 வேத இலக்கியங்களின் அதிகாரியான வியாசதேவர் ” நாயம் சுகாபோ பகவான் ” என்று தொடங்கும் ஸ்லோகத்தில் ” ஆகையால் கோபிகைகளை தவிர வேறு எவராலும் ராஸலீலாவிற்குள் நுழையவே முடியாது ” என்று றுதியிட்டு கூறுகின்றார்.

 சைதன்ய மகாபிரபுவால் இவ்விளக்கங்கள் அளிக்கப்படுவதற்கு முன்பு வேங்கடபட்டர் ஸ்ரீமந்நாராயணரே பரமபுருஷர் என்று உபாசிக்கும் இராமனுஜாசாரியாரின் சீடராக ஸ்ரீ வைஷ்ணவராக தாஸ்ய சேவையை சிறப்புடன் மேற்கொண்டிருந்தார் .

ஆனால் தற்போதோ தமது நகைச்சுவையான பேச்சினாலேயே ஸ்ரீசைதன்ய மகாபிரபு வேங்கடபட்டருக்கு தனது தவறுகளை புரிய வைத்து தெளியவைத்தார் . 

பிரபு மேலும் தொடர்ந்தார் . ” எனதருமை வேங்கப்பட்டரே சந்தேகத்திற்கிடமின்றி பிரபு கிருஷ்ணரே பரமபுருஷர் என்பதை அறிவாய் . இதுவே வேதங்களின் தீர்ப்பாகும் ”

பிரபு நாராயணர் , கிருஷ்ணரின் செல்வத்தின் வடிவமாக , லக்ஷ்மியையும் அவளை வழிபடுவர்களையும் கவர்கிறார் .

            

Sri Chaitanya mahaprabhu at sri rangam talk

மேற்குறிப்பிட்ட அவதாரங்கள் அனைத்தும் பகவானின் அம்சங்களோ அல்லது  அம்சங்களின் அம்சங்களோதான். ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணரோ முழுமுதற்கடவுளாவார். நாஸ்திகர்களால் தொல்லை விளைவிக்கப்படும் போதெல்லாம் அவர்களனைவரும் பிரபஞ்சத்தில் தோன்றுகின்றனர். ஆஸ்திகர்களைக் காப்பதற்காகவே பகவான் அவதரிக்கின்றார்.

 ஏனெனில் ஸ்ரீமந்நாராயணரிடம் இல்லாத நான்கு உன்னத தகுதிகள் கிருஷ்ணரிடம் அமைந்திருப்பதால் தான் லக்ஷ்மியானவள் அவரது சகவாசத்தை விரும்புகின்றாள் . ” ஸித்தாந்தாஸ் த்வ அபேதே’பி ‘ , இந்த அருமையான ஸ்லோகமே கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என்பதற்கு ஆதாரமாகும்.

 தன்னுணர்வு பாதையில் கிருஷ்ணருக்கும் நாராயணருக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லாதிருப்பினும் ரஸத்தின் உன்னத சுவையை அளிப்பவரில் கிருஷ்ணரே நாராயணரைவிட உயர்ந்து நிற்கின்றார் . இதுவே உன்னத ரஸத்தின் தீர்வாகும்.

 

பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் லக்ஷ்மிதேவியின்
மனதை கவர்வதைபோல நாராயணரால் கோபிகைகளின் மனதைக்கவர இயலவில்லை . இது கிருஷ்ணரின் உன்னதத்தை
நிரூபிக்கின்றது.

நாராயணரின் தன்மையை மேலும் கூற வேண்டுமானால் , பிரபு கிருஷ்ணர் விளையாட்டாக கோபிகைகளின் முன்பு நாராயணராக காட்சியளித்தார் . கிருஷ்ணரின் நான்குகரங்களுடைய நாராயன் வடிவத்தால் கோபிகைகளின் பேரின்ப காதலை மிகைப்படுத்த இயலவில்லை . அவர்களது பரவசநிலையானது தடைபடத்தொடங்கியது . கற்றறிந்த பண்டிதர்களால் நந்தாவின் மைந்தன் மீது கோபிகைகள் கொண்டிருக்கும் பாவத்தை புரிந்துகொள்ள இயலாது . கிருஷ்ணருடன் கோபிகைகள் கொண்டிருக்கும் பரவசத்தின் பரமரஸமே ஆன்மீக வாழ்வின் உன்னதமா யோக நிலையாகும்.

 இவ்வாறாக ஸ்ரீசைதன்ய மகாபிரபு வேங்கப்பட்டரின் கர்வத்தை தோற்கவைத்தார். ஆனாலும் கவலையுற்று இருந்த அவரை மகிழ்விப்பதற்காக மேலும் கூறினார். உண்மையில் உம்மை சீண்டிப்பார்க்கவே நான் விளையாட்டாக உரையாடினேன். ஆயினும் என்னிடம் கேட்டதெல்லாம் சாஸ்திரங்களின் தீர்வேயாகும். இதை ஏற்பதே வைஷ்ணவர்களின் குணங்களாகும்.

கிருஷ்ணருக்கும் நாராயணருக்கும் வேறுபாடில்லை. இருவரும் ஒருவரோ அதைப்போலவே கோபிகைகளுக்கும் லக்ஷ்மிதேவிக்கும் இடையேயும் வேறுபாடில்லை . அவர்கள் அவைரும் ஒரே வடிவமே லக்ஷ்மியே கோபிகைகளின் வடிவில் கிருஷ்ணருடன் உறவுகொள்கிறாள். யாரொருவர் பகவானின் வடிவங்களை பேதப்படுத்திப்பார்க்கின்றாரோ அவர் குற்றமிழைத்தவராவார் .

பிரபுவின் பல்வகைப்பட்ட தெய்வீக வடிவங்களுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை . பல்வேறுபட்ட வடிவங்கள் அனைத்தும் பல்வேறுபட்ட மனோபாவங்களில் உள்ள பக்தர்களை மகிழ்விப்பதற்காகவேயாகும் . உண்மையில் பரமபுருஷர் ஒருவரே. அவரது பல்வேறு அவதாரங்கள் அவரின் பக்தர்களை திருப்திபடுத்து வதற்காகவேயாகும் .

எவ்வாறு வைடூர்யமானது பல்வேறுபட்ட உலோகங்களுடன் காணப்படும் போது பல்வேறுபட்ட வண்ணங்களை வெளிப்படுத்துகின்றதோ , அதைப்போலவே பக்தர்களின் மனோபாவங்களுக்கு ஏற்றார்போல அச்யுதனும் ( அழிவற்றவர் ) பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் அவர் ஒருவரே

அதன்பிறகு வேங்கடபட்டர் , நான்மிகவும் இழிவடைந்த ஜீவனாவேன் , நீரே பரபுருஷரான கிருஷ்ணராவீர் . உமது எல்லையற்ற லீலைகளை புரிந்து கொள்ள தகுதியற்றவனாவேன். நீர்கூறுவது எதுவாயினும் அதையே உண்மையாக ஏற்கிறேன் என்று கூறினார் .

இருப்பினும் நான் லக்ஷ்மி நாராயணருக்கு புரிந்த சேவையின் காரணத்தினால் தான் அவர்களின் கருணையினால் உமது தாமரைப்பாதங்களை நான் தரிசிக்க இயன்றது . உமது காரணமற்ற கருணையினால் கிருஷ்ணரின் புகழை எனக்கு எடுத்துரைத்தீர்கள் , யாரொருவராலும் பிரபுவின் உன்னத வளங்களையும் , தகுதிகளையும் , வடிவங்களையும் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது.

 தற்போது நான் கிருஷ்ணருக்கு செய்யும் சேவையே உன்னத வடிவின் சேவையாகும் என்பதை புரிந்துகொண்டேன் . உமது காரணமற்ற கருணையின் காரணத்தினால் உண்மையை விளக்கிக்கூறி எனது வாழ்வையே நிறைவாக்கிவிட்டீர் இவ்வாறாக கூறிக்கொண்டே வேங்கடாட்டர் பிரபுவின் தாமரைப்பாதங்களில் விழ பிரபுவோ தமது கருணையை பொழிந்து அவரை அரவணைத்துக் கொண்டாடர்.

Sri Chaitanya mahaprabhu lotus feet at sri rangam

இவ்விதமாக வேங்கப்பட்டரை கௌரங்கர் ஆட்கொண்டார். வேங்கடபட்டரின் மைந்தனே ஸ்ரீகோபாலப்பட்ட கோஸ்வாமி ஆவார்.

சதுர்மாஸத்தின் நிறைவும் வந்தபோது ஸ்ரீசைதன்யகாபிரபு வேங்கடபட்டரின் அனுமதியோடு மீண்டும் ஸ்ரீரங்கத்தை தரிசித்துவிட்டு தனது தொடுத்திய பயணத்தை தொடாந்தார் ( சைதன்ய சரிதாம்ருதத்தின் மத்யலீலா பாகம் இரண்டு அத்தியாயம் ஒன்பது ஸ்லோகம் 81லிருந்து 165 வரை )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question