Friday, March 29

பகவத் கீதை – 6.5

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

உத்தரேத் ஆத்மனாத்மானம்
நாத்மானம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனோ
பந்துர் ஆத்மைவரிபுர் ஆத்மன:

Synonyms:

உத்தரேத் — விடுதலை செய்ய வேண்டும்; ஆத்மனா — மனதால்; ஆத்மானம் — கட்டுண்ட ஆத்மா; ந — என்றுமில்லை; ஆத்மானம் — கட்டுண்ட ஆத்மா; அவஸாதயேத் — இழிநிலையை அடையச் செய்ய; ஆத்மா — மனம்; ஏவ — நிச்சயமாக; ஹி — ஐயமின்றி; ஆத்மன: — கட்டுண்ட ஆத்மாவின்; பந்து: — நண்பன்; ஆத்மா — மனம்; ஏவ — நிச்சயமாக; ரிபு — எதிரி; ஆத்மன: — கட்டுண்ட ஆத்மாவின்.

Translation:
மனதின் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனமே கட்டுண்ட ஆத்மாவின் நண்பனும் எதிரியுமாவான்.

Purport:

ஆத்மா எனும் சொல், உபயோகிக்கப்படும் இடத்திற்கு ஏற்ப உடல், மனம், ஆத்மா என வெவ்வேறு பொருள்படும். யோக முறையில், கட்டுண்ட ஆத்மாவும் மனமும் மிகவும் முக்கியமானவை. யோகப் பயிற்சியின் மையம் மனமே என்பதால், இங்கே ஆத்மா என்பது மனதைக் குறிக்கின்றது. யோகப் பயிற்சியின் நோக்கம், மனதைக் கட்டுப்படுத்துவதும், புனின்பப் பொருள்களின் மீதான பற்றிலிருந்து அதனை விலக்குவதுமாகும். அறியாமை எனும் சகதியிலிருந்து கட்டுண்ட ஆத்மாவை விடுவிக்கும் வகையில் மனதைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று இங்கே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜட வாழ்வில் உள்ளவன் மனதின் ஆதிக்கத்திற்கும் புலன்களின் ஆதிக்கத்திற்கும் உட்பட்டவன். உண்மை என்னவெனில், ஜட இயற்கையை ஆள விரும்பும் அஹங்காரத்துடன் மனம் இணைந்துள்ளதால், தூய ஆத்மா இப்பௌதிக உலகில் சிக்கியுள்ளது. எனவே, ஜட இயற்கையின் பளபளப்பினால் கவரப்படாதவாறு மனம் பயிற்சியளிக்கப்பட வேண்டும். அதன் மூலம், கட்டுண்ட ஆத்மாவை காப்பாற்றலாம். புலனின்பப் பொருள்களின் கவர்ச்சியினால் ஒருவன் தன்னை இழிவுப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஒருவன் எந்த அளவிற்கு புலனின்பப் பொருள்களால் கவரப்படுகிறானோ, அந்த அளவிற்கு அவன் ஜட வாழ்வில் பிணைக்கப்படுகிறான். இப்பிணைப்பிலிருந்து விடுபட மனதை கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்துவதே மிகச் சிறந்த வழியாகும். இதனை நிச்சயமாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக, ஹி எனும் சொல் இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பின்வருமாறும் கூறப்பட்டுள்ளது:

மன ஏவ மனுஷ்யானாம்
காரணம் பந்த-மோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கோ
முக்த்யை நிர்விஷயம் மன:

“மனிதனின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் மனமே காரணம். புலனின்பப் பொருள்களில் ஆழ்ந்துள்ள மனம் பந்தத்திற்கும், அவற்றிலிருந்து விலக்கப்பட்ட மனம் மோக்ஷத்திற்கும் காரணமாகின்றன.” (அம்ருத-பிந்து உபநிஷத் 2) எனவே, கிருஷ்ண உணர்வில் எப்போதும் ஈடுபத்தப்பட்டுள்ள மனம் உன்னத மோக்ஷத்திற்குக் காரணமாகின்றது.

+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question