Friday, April 19

Sri Baladeva Vidyabhushana (Tamil)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர்

ஸ்ரீல பலதேவ வித்யா பூஷணர் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரிசாவில் பிறந்தார். மிகவும் சிறிய வயதிலேயே அவர் இலக்கணம் கவிதைகள் தர்க்கம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். பிறகு தீர்த்த யாத்திரை செல்லும் வழியில், ஸ்ரீ ராதா தாமோதர தேவரை சந்தித்தார். அவர் ஸ்ரீ ரசிகானந்ததேவரின் பரம சிஷ்யர் ஆவார். அவருடன் தத்துவம் பற்றி விளக்கமாக கேட்டறிந்து தனது அறிவை வளர்த்துக் கொண்டார் . ஸ்ரீ ராதா தாமோதரா தேவர். பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைஷ்ணவக் கொள்கைகளையும், அவரின் எல்லையற்ற கருணையையும் விரிவாக எடுத்துரைத்தார்.மிக குறுகிய காலத்திலேயே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தை, அவரிடம் கற்று, அதில் கைதேர்ந்தவர் ஆனார்.

கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான விஸ்வநாத சக்கரவர்த்தி தாக்கூரிடம், பகவானின் சக்தியானது, ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும், வேறாகவும் உள்ளது என்ற ( “அசிந்தியபேதா பேத தத்துவம்”) கௌடிய வைஷ்ணவத் தத்துவ உபதேசத்தை பெற்றார்.

ஒரு நாள் ஜெய்ப்பூர் அரசவையில் ஸ்ரீ ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த சிலர், கௌடிய சம்பிரதாயத்தை பற்றி விவாதம் நடத்த ஆரம்பித்தனர். அவர்கள் அரசரிடம் கௌடிய வைஷ்ணவ சமூகத்தினரிடம், நமது வைதீக தர்மத்தின் மிக முக்கியமான வேதாந்த சூத்ரத்திற்கு விளக்கவுரையும் இல்லை (பாஷ்யம்), சித்தாந்தங்களும் இல்லை என்று தெரிவித்தனர். எனவே இவர்கள் ஸ்ரீ கோவிந்தர் மற்றும் கோபிநாதர் விக்கிரங்களை வழிபாடு செய்வதை நிறுத்திவிட்டு, அந்த உரிமையை உண்மையான சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

ஜெய்ப்பூர் அரசர் கௌடிய சம்பிரதாயத்தை சேர்ந்தவராக இருந்ததனால், அவர் விருந்தாவனத்தில் இருக்கும் ஸ்ரீ விஸ்வநாத சக்கரவர்த்தித் தாகூரருக்கு உடனே இச் செய்தியை அனுப்பி , கௌடிய சம்பிரதாயத்திடம் வேதத்தாந்த சூத்ரத்திற்கு(பாஷ்யம் )விளக்கவுரை இல்லையா ? என்றும், அப்படி இருந்தால் உடனே அதை ஜெய்ப்பூருக்கு அனுப்பி, ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த பண்டிதர்களுக்கு விடை தந்தருளுமாறு வேண்டினார்.

அந்த சமயத்தில் ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் முதுமையின் காரணமாக உடல் பலவீனமானவராக இருந்ததினால், அவரால் ஜெய்ப்பூர் வரையிலான பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில், தனது மாணவனும் சிஷ்யனும் ஆகிய பலதேவரை தனக்கு பதிலாக அனுப்பி வைத்தார்.

பலதேவர் வேத சாஸ்திரங்களில் நிபுணராக இருந்ததால் ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த பண்டிதர்களின் கேள்விகளுக்கு பதில்கள் தர ஆயத்தமானார். மிக நீண்ட கடினமான விவாதம் நடைபெற்றது என்றாலும், அந்த பண்டிதர்களால், பலதேவரின் தீர்மானமான, முடிவான, துளைக்கும் ,வாதத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்கள்.

பலதேவரின் வாதம் என்னவென்றால், கௌடிய சம்பிரதாயத்தின் ஸ்தாபகரான, ஸ்ரீசைதன்ய மஹாபிரபு அவர்கள் ஸ்ரீமத் பாகவதமே, வேதாந்தத்தின் மிக உயர்ந்த விளக்க உரை என்றும், ஸ்ரீமத் பாகவதத்திலும் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்றும், இதற்கு ஶ்ரீல ஜீவ கோஸ்வாமி எழுதிய சத் சந்தர்பம் என்ற நூலிலும் ஆதாரம் உள்ளது என்றார். ஆகவே கௌடிய சம்பிரதாயம் ஸ்ரீமத் பாகவதத்தையே, வேதாந்தத்தின் இயற்கையான விளக்க உரையாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு தனியான விளக்க உரை தேவையில்லை என்றும் விளக்கினார்.

ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த பண்டிதர்கள் இந்த சமயத்தில் உரக்க குரல் எழுப்பி, அவரே விளக்க உரை இல்லை என்று ஒத்துக் கொள்கிறார், அவர்களிடம் விளக்கவுரை இல்லை என்று கோஷம் எழுப்பினார்கள்.

பலதேவரும் கௌடிய சம்பிரதாயத்தின் விளக்க உரையை சில நாட்களில் சபையில் சமர்பிப்பதாக உறுதியளித்தார். அவரது பதிலால் பண்டிதர்கள் அப்போதைக்கு அமைதியானார்கள். மனதில் மிகுந்த யோசனையுடன் பலதேவர், ஶ்ரீல ரூப கோஸ்வாமி வழிபட்ட விக்ரகமான ஸ்ரீகோவிந்தரின் ஆலயத்திற்கு சென்று சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, பின் நடந்த எல்லாவற்றையும் கோவிந்தரிடம் சொல்லி பிரார்த்தனை செய்தார்.

அன்று இரவு பலதேவரின் கனவில் வந்த பகவான் ஸ்ரீ கோவிந்தர் ” நீ கண்டிப்பாக விளக்கவுரை எழுத வேண்டும் .அந்த விளக்க உரை என்னாலேயே உனக்கு அருளப்படும். அது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் குறையற்ற பாஷ்யமாக இருக்கும் ” என்றும் கூறினார். கண்விழித்த பலதேவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மனதில் புதிய பலம் ஏற்பட்டவராக, தனது புதிய கடமையை செய்யத் தயாரானார் .பிறகு பகவான் கோவிந்தரின் தாமரைப் பாதங்களை மனதில் தியானித்து, எழுதத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவரது பணி நிறைவு பெற்றது. பகவான் கோவிந்தரால் விளக்கப்பட்ட இந்த உரைக்கு , ” கோவிந்த பாஷ்யம்” என்று பெயர் சூட்டினார்.

பலதேவர் கோவிந்த பாஷ்யத்தை எடுத்துக்கொண்டு அரசவையில் நுழைந்தபோது எல்லா பண்டிதர்களும், அவருக்காக காத்துக் கொண்டிருந்தனர். விளக்கவுரையை பார்த்ததும் அவர்கள் பேச்சற்றவர்கள் ஆனார்கள். கூடியிருந்த அனைவரும் கோவிந்த பாஷ்யத்தை மனபூர்வமாக ஏற்றுக்கொண்டனர். அரசர் பலதேவரின் கோவிந்த பாஷ்யத்திற்கும் கௌடிய சம்பிரதாயத்திற்கும் மாபெரும் வெற்றி என்று அறிவித்தார். ஸ்ரீ கோவிந்தர் மற்றும் கோபிநாதர் விக்கிரங்களை கௌடிய சம்பிரதாயத்தினர் வழிபாடு செய்ய தடையேதும் இல்லை என்று அரசர் ஆணை பிறப்பித்தார். அப்போது பலதேவரின் மிகச் சிறந்த அறிவாற்றல் காரணமாக அந்த பண்டிதர்கள் பலதேவருக்கு பலதேவ “வித்யா பூஷணர்” என்ற பட்டம் வழங்கினார்கள். அதாவது சிறந்த அறிவே ஒருவரின் ஆபரணம் என்று அதற்கு பொருள். அன்றிலிருந்து அனைவராலும் “பலதேவ வித்யா பூஷணர்” என்று அழைத்து சிறப்பிக்கப்பட்டார்.

ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த பண்டிதர்கள் ஶ்ரீல பலதேவ வித்யாபூஷணரின் அறிவால் ஈர்க்கப்பட்டு அவரயே குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய சீடர்களாக விரும்பினார்கள். ஶ்ரீல பலதேவ வித்யாபூஷணர் மிகவும் பணிவுடன் அதை மறுத்தார். நான்கு வகையான சம்பிரதாயங்களில் ஶ்ரீ சம்பிரதாயமும் ஒன்றாகும். பகவானுக்கு சேவை செய்வதையே உண்மையான மதம் மற்றும் தர்மம் என்று வேத சாஸ்திரம் போதிக்கிறது அதுவே ஶ்ரீ சம்பிரதாயத்தின் கொள்கையாகவும் இருப்பதால், கௌடிய சம்பிரதாயத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் நான் ஸ்ரீ சம்பிரதாயத்திற்கு அவமரியாதை செய்ய முடியாது என்றும் ,அப்படி செய்வது மிகப்பெரிய குற்றம் என்று கூறினார்.

ஶ்ரீ பலதேவ வித்யா பூஷணர் தன் வெற்றி செய்தியை எடுத்துக்கொண்டு பிருந்தாவனம் சென்றார். ஶ்ரீீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூரின் தாமரை பாதங்களை நமஸ்கரித்து, வெற்றி செய்தியை தெரிவித்தார். விருந்தாவன வாசிகளும் மற்ற வைணவர்களும் மிகவும் ஆனந்தம் அடைந்தனர். ஶ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் ஶ்ரீபல தேவ வித்யா பூஷணரை மனமகிழ்ந்து ஆசிர்வாதம் செய்தார்.

மேலும் பக்தி யோகம் பதிவுகளுக்கு:
Telegram – https://t.me/bhakti_yogam
Website – www.bhaktiyogam.com
App – https://play.google.com/store/apps/details?id=com.iskconcbe.bhaktiyoga

Thanks to Suddha Bhakti Tamil Team

+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question