Thursday, March 28

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 5 (பிங்களாவின் கதை) Gita mahatmiya Chapter-5 (Story of Pingala)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஐந்தாம் அத்தியாயத்தின் மஹிமை

 பகவான் விஷ்ணு கூறினார், “எனதன்பு லட்சுமியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தின் அளவிட முடியாத வர்ணனைகளை கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக”. 

    மதரா என்னும் மாவட்டத்தில் புருகுட்சப்பூர் என்னும் ஊர் உள்ளது. அங்கு பிங்களன் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவருடைய குழந்தை பருவத்திலிருந்தே அவருக்கு வேதங்களும் பல பிராமண பண்புகளும் கற்றுத்தரப்பட்டன. ஆனால் அதில் சிறிதும் ஆர்வம் காட்டாத அவர், இளமை பருவத்தை அடைந்ததும் பிராமண கலாச்சாரத்தை முழுவதுமாக உதறித்தள்ளிவிட்டு, இசை கருவிகள் வாசிப்பது, பாடுவது மற்றும் நடனம் ஆடுவது போன்றவற்றை கற்க துவங்கினார். படிப்படியாக அதில் பிரபலம் அடைந்தார். இதை கண்ட நாட்டு மன்னர், பிராமணரை அழைத்து, தன்னுடன் அரண்மனையிலேயே தங்கிவிடும்படி கேட்டுக்கொண்டார். இதைகேட்டு மகிழ்ந்த பிராமணர் இதற்கு ஒப்புக்கொண்டார். அரண்மனையில் படிப்படியாக தன் நிலை மறந்து பாவ காரியங்கள் செய்ய துவங்கினார் பிராமணர். போதை வஸ்துக்களுக்கு அடிமையானார்; பிறர் மனைவியருடன் தகாத உறவு வைத்துக்கொண்டார்; மேலும் பல பாவ காரியங்கள் செய்தார்.

    அரண்மனையில் தனக்கு கிடைத்துள்ள பதவி மற்றும் செல்வாக்கு, மன்னரோடு தனக்கு இருக்கும் நெருங்கிய நட்பு ஆகியவற்றால் மிகுந்த கர்வம் கொண்டிருந்தார் பிராமணர். மன்னர் தனிமையில் இருக்கும் போது அடுத்தவர்களை பற்றி தவறாக விமர்சனம் செய்வதில் தனி ஆனந்தம் கொண்டிருந்தார். இந்த பிராமணருக்கு அருணா என்ற மனைவி இருந்தாள். அவள் தாழ்ந்த குளத்தில் பிறந்தவள். தன்னுடைய காமத்தினால் பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்தாள் அந்த பெண். இதை தன் கணவர் கேள்விப்பட்டுவிட்டார் என்று தெரிந்ததும், அவரை கொள்ள முடிவு செய்தாள். அரண்மனைக்குள் புகுந்து பிங்களாவை கழுத்தறுத்து கொன்று, அவரின் உடலை தோட்டத்தில் புதைத்தாள்.

    தனது இறப்பிற்கு பின்னர் பிங்களன் பல காலங்களுக்கு நரகத்தில் கொடுமையான தண்டனைகளை அனுபவித்தார். தண்டனை முடிந்ததும் அடுத்த பிறவியில் ஒரு கழுகாக பிறப்பெடுத்தார். அதே சமயம் பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொண்டதன் காரணமாக அருணாவிற்கு தொற்று வியாதி வந்தது. அவள் தன் இளமையை இழந்து அருவருப்பாக காட்சியளித்தாள். சிறிது காலத்தில் அவளும் இறந்தாள். இறப்பிற்கு பின்னர் நரகத்தில் பல காலம் கொடுமையான தண்டனைகளை அனுபவித்தாள். அதன் பின்னர் அடுத்த பிறவியில் ஒரு பெண் கிளியாக பிறந்தாள்.

    ஒரு நாள் இந்த கிளி உணவை தேடி அலைந்து கொண்டிருக்கும்போது, கழுகு அதை பார்த்துவிட்டது. தன் பூர்வ ஜென்மத்தை நினைவு கூர்ந்த கழுகு கிளியை தன் கூறிய அலகுகளால் தாக்கியது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கிளி கீழே விழ துவங்கியது. கீழே ஒரு மண்டைஓட்டில் தண்ணீர் நிரம்பியிருந்தது. கிளி அதற்குள் விழுந்து மூழ்கி தன் உயிரை விட்டது. அதே சமயம் ஒரு வேடன் கழுகை அம்பு எய்து கொல்ல முயன்றான். அம்புடன் கழுகும் கீழே விழுந்தது. ஆனால் அதன் தலை, மண்டைஓட்டினுள் இருந்த நீருக்குள் விழுந்து. கழுகும் மூச்சுத்திணறி இறந்தது.

    அப்போது யமதூதர்கள் வந்து யமலோகத்திற்கு அவர்கள் இருவரையும் அழைத்து சென்றார்கள். செல்லும் வழியில் அவர்கள் இருவருக்கும் தாங்கள் செய்த பாவங்கள் நினைவிற்கு வந்தது. தங்களுக்கு கிடைக்கப்போகும் தண்டனை பற்றி எண்ணி மிகவும் பயந்திருந்தனர். தன் முன் நிறுத்தப்பட்டிருந்த அவர்களை பார்த்த எமதர்மராஜா, “நீங்கள் இருவரும் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்றீர்கள். இனி நீங்கள் இருவரும் வைகுந்தத்திற்கு செல்லலாம்” என்று உத்தரவிட்டார்.

    இதை கேட்ட பிங்களன் மற்றும் அருணா இருவரும் ஆச்சர்யத்தோடு, “இவ்வளவு பாவங்களை முற்பிறவிகளில் செய்த நாங்கள் எவ்வாறு வைகுந்தம் செல்ல தகுதி பெற்றோம்” என்று யமதர்மரிடம் வினவினார்கள்.

    யமராஜா, “கங்கை நதிக்கரையில் வடுகன் என்ற பெயருடைய பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பகவான் விஷ்ணுவின் பெரும் பக்தர் ஆவார். அணைத்து விதமான ஆசைகளிலிருந்தும் மோகங்களிலிருந்தும் விடுபட்டிருந்தார் அவர். தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தை படித்து வந்த அவர், இறந்ததும் வைகுந்தத்திற்கு சென்றுவிட்டார். அவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தை படித்து வந்ததால் மிகவும் தூய்மையடைந்திருந்தார். அவருடைய உடலின் மண்டையோட்டில் நீங்கள் இருவரும் உயிரை விட்டதால், நீங்களும் தூய்மை அடைந்து வைகுந்தம் செல்ல தகுதி பெற்றீர்கள். இதுவே ஸ்ரீமத் பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தின் பெரும் சிறப்பாகும்” என்று கூறினார்.

    பகவான் விஷ்ணு கூறினார், “எனதன்பு லட்சுமியே, யமதர்மன் கூறிய விளக்கத்தை கேட்ட அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். பின்னர் வைகுந்தத்திற்கு அவர்களை அழைத்து செல்ல காத்திருந்த புஷ்பக விமானத்தில் ஏறிச்சென்றார்கள் “. எனவே, ஒருவன் எவ்வளவு பாவங்களை செய்திருந்தாலும் அவன் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தை தொடர்ந்து படித்து வந்தால் வைகுந்ததை அடைவது நிச்சயம்”.

+10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question