Friday, March 29

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 4 (பரதரின் கதை) Gita mahatmiya Chapter-4 (Story of Saint Bharata)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் மஹிமை

பகவான் விஷ்ணு கூறினார், “எனதன்பு லட்சுமியே, இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் வர்ணனை பற்றி கூறுகிறேன். கேட்பாயாக”. 

    கங்கை நதிக்கரையிலுள்ள காசி (பனாரஸ்) என்னும் ஊரில் விஸ்வநாதர் கோவிலில், பரதர் என்னும் துறவி வாழ்ந்து வந்தார். மிகுந்த பக்தியுடன் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்து வந்தார். முன்னொருநாளில் பரதர் பாதயாத்திரை சென்றபொழுது, தபோதன் என்னும் ஊரிலுள்ள பகவான் கிருஷ்ணரை தரிசிக்க சென்றார். தரிசனம் முடிந்ததும் சற்று ஓய்வெடுக்க எண்ணி அவர் இரண்டு வில்வ மரங்களை பார்த்தார். அதன் நிழலில் ஓய்வெடுக்கலானார். ஒரு மரத்தின் வேர்களை தன் தலைக்கு அடியிலும் இன்னொரு மரத்தின் வேர்களை தன் கால்களுக்கு அடியிலும் வைத்துக்கொண்டு உறங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றதும், இந்த இரண்டு மரங்களும் பட்டுப்போக துவங்கின.

    ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் இரண்டு மரங்களும் முழுவதுமாக பட்டுபோய் இறந்து விட்டன. அந்த இரண்டு மரங்களிலும் இருந்த இரண்டு ஆத்மாக்கள் அடுத்த பிறவியில் ஒரு உன்னதமான பிராமணருக்கு மகள்களாக பிறந்து வளர்ந்தனர். அவர்களுக்கு ஏழு வயதிருக்கும்போது ஒருமுறை காசிக்கு பாதயாத்திரை சென்றனர். அப்போது பரத மஹாராஜாவை சந்தித்த அவர்கள் சற்றும் தாமதிக்காமல் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினர். பின்னர் அவர்கள் இருவரும் இனிமையான குரலில், “பரத மஹாராஜாவே, உங்களுடைய கருணையினால் தான் நாங்கள் இருவரும் மரத்தின் வடிவிலிருந்து விடுதலை பெற்றோம்” என்று கூறினர்.

    மிகவும் வியப்படைந்த பரத மகாராஜா, “அன்பான குழந்தைகளே, நான் எப்போது உங்களை சந்தித்தேன்? நான் எப்போது உங்களுக்கு விடுதலை அளித்தேன்? அதோடு நீங்கள் எவ்வாறு மரத்தின் உருவம் பெற்றீர்கள்? எனக்கு இது பற்றி ஒன்றுமே தெரியாது. தயை கூர்ந்து விளக்கமளியுங்கள்”என்று புரியாமல் வினவினார். அந்த இருவரும் முதலில் தாங்கள் எவ்வாறு மரத்தின் உருவம் பெற்றார்கள் என்று கூற துவங்கினர்.

    அவர்கள், “பரத மகாராஜா, கோதாவரி நதிக்கரையில் விச்சிந்நபாபம் என்ற புனித ஸ்தலம் உள்ளது. அங்கு மிக கடினமாக தவம் செய்யும் ஸத்யதபஸ் என்ற ரிஷி வாழ்ந்து வந்தார். சூரியன் சுட்டெரிக்கும் காலத்தில் நெருப்பின் இடையில் அமர்ந்து தவம் செய்வார்; கடும் குளிரில் ஆற்றில் தவம் செய்வார். ஆகையால் அவர் முழுவதுமாக தூய்மையடைந்திருந்தார். தன் புலன்கள் அனைத்தையும் அவரால் கட்டுப்படுத்த முடிந்தது. இதன் காரணத்தால் பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களை முழுமையாக சரணடைந்திருந்தார்.

    பிரம்மதேவர் தினமும் ஸத்யதபஸ்பாவை சந்தித்து, பகவான் கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது என்று கேள்விகள் கேட்பார். ஸத்யதபஸ்ப்பாவும் விளக்கமளிப்பார். இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த இந்திரதேவருக்கு, ஸத்யதபஸ்பாவை பார்த்து பொறாமை ஏற்பட்டது. எங்கு ஸத்யதபஸ்ப்பா தன் தவ வலிமையால் இந்திரலோகத்தை கைப்பற்றிவிடுவாரோ என்ற பயம் இந்திரனுக்கு ஏற்பட்டது. இந்திரன் உடனே தேவலோகத்து அப்சரசுகளாக இருந்த எங்கள் இருவரையும் அழைத்து, ஸத்யதபஸ்பாவின் தவத்தை கலைக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்திரனின் ஆணையை ஏற்று நாங்கள் இருவரும் கோதாவரி நதிக்கரையிலுள்ள ஸத்யதபஸ்ப்பாவின் ஆசிரமத்தை வந்தடைந்தோம். ஸத்யதபஸ்ப்பாவின் புலன்களையும் உணர்ச்சிகளையும் தூண்டும் விதத்தில் நாங்கள் இருவரும் பாடிக்கொண்டே அவரை சுற்றி நடனமாடினோம். அவ்வாறு நாங்கள் எங்களை மறந்து ஆடிக்கொண்டிருக்கையில் எங்களது ஆடைகள் விலகி மார்புகள் வெளியே தெரிந்தது. உடனடியாக ஸத்யதபஸ்ப்பா தன் கையில் நீரை எடுத்து, “நீங்கள் இருவரும் கங்கை நதிக்கரையில் வில்வ மரங்களாக மாறுவீர்கள்” என்று சபித்தார். இந்த சாபத்தை சற்றும் எதிர்பாராத நாங்கள் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினோம். நாங்கள், “தயை கூர்ந்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் இந்திரனின் சேவகர்கள்” என்று மன்றாடினார்கள். அவர்களுடைய பணிவை கண்டு மனமுறுகிய ரிஷி, நாங்கள் எங்களுடைய பூர்வ ஜென்மத்தை நினைவு கொள்வோம் என்றும், மஹாராஜா பரதர் எங்களை விடுவிப்பார் என்றும் ஆசி வழங்கினார்.

    “பரத மஹாராஜா, தாங்கள் தபோவனத்திற்கு வந்தபொழுது, எங்களின் மரத்தடியிலேயே ஓய்வெடுத்தீர்கள். அப்போது நீங்கள் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்தீர்கள். நாங்களும் அதை கேட்டோம். அதன் பலனால் மரத்தின் வடிவிலிருந்து விடுதலை பெற்றோம். அதோடல்லாமல் பௌதிக ஆசைகள் எங்களிலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டது” என்று தங்கள் கதையை கூறி முடித்தார்கள்.

    பகவான் விஷ்ணு கூறினார், “எனதன்பு லட்சுமியே, அந்த இரண்டு பெண்களின் கதையை கேட்ட பரத மஹாராஜா மகிழ்ச்சியடைந்தார். அவர்களை வாழ்த்திவிட்டு தன் ஆசிரமத்திற்கு திரும்பினார். அந்த இரண்டு பெண்களும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்து என் பாத கமலங்களின் சேவையை பெற்றனர்”.

+8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question