Wednesday, April 24

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 8

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பரத்தை அடைதல்

    Bg 8.1 — அர்ஜுனன் வினவினான்: எம்பெருமானே, உத்தம புருஷரே, பிரம்மன் என்பது என்ன? அத்யாத்மம் என்பது என்ன? பலன் நோக்குச் செயல்கள் யாவை? இந்த ஜடத்தோற்றம் என்ன? தேவர்கள் யாவர்? இவற்றை தயவு செய்து எனக்கு விளக்குவீராக.

    Bg 8.2 — மதுசூதனரே, யாகங்களின் இறைவன் யார்? உடலில் அவர் எவ்வாறு வசிக்கின்றார்? பக்தித் தொண்டில் ஈடுபடுவோர் உம்மை மரணக்காலத்தில் எவ்வாறு அறிய முடியும்?

    Bg 8.3 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிரம்மன் எனப்படுவது அழிவற்றதும் உன்னதமானதுமாகும், அதன் ஸ்வபாவமான (நித்திய இயற்கையான) ஜீவாத்மா, அத்யாத்ம என்று அழைக்கப்படுகிறான். ஜீவாத்மாவின் ஜடவுடலை வளர்க்கும் செயல்கள், கர்மா (பலன்நோக்குச் செயல்கள்) என்று அழைக்கப்படுகின்றன.

    Bg 8.4 — உடல் பெற்ற ஆத்மாக்களில் சிறந்தவனே, எப்போதும் மாறிக் கொண்டுள்ள பௌதிக இயற்கை, அதிபூத எனப்படும். சூரியன், சந்திரன் போன்ற அனைத்து தேவர்களும் அடங்கிய பகவானின் விஸ்வரூபம் அதிதைவ எனப்படும். மேலும், உடல் பெற்ற அனைத்து ஜீவன்களின் இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றிருக்கும் பரம புருஷனாகிய நான், அதியக்ஞ (யாகத்தின் இறைவன்) என்று அழைக்கப்படுகிறேன்.

    Bg 8.5 — மேலும், தனது வாழ்வின் இறுதி காலத்தில், யாராவது என்னை மட்டும் எண்ணிக் கொண்டு உடலை விட்டால், உடனடியாக அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

    Bg 8.6 — ஒருவன் தனது உடலை விடும்போது எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன்அடைகிறான்.

    Bg 8.7 — எனவே, அர்ஜுனா, என்னை இந்த (கிருஷ்ண) உருவில் எப்போதும் எண்ணிக் கொண்டு, அதே சமயம் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் செய்வாயாக. உன்னுடைய செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்துவதன் மூலம், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை.

    Bg 8.8 — பரம புருஷ பகவானாக என்னை தியானித்து, எப்போதும் தனது மனதை நினைப்பதில் ஈடுபடுத்தி, இவ்வழியிலிருந்து சற்றும் பிறழாது பயிற்சி செய்பவன், பார்த்தனே, நிச்சயமாக என்னை அடைகிறான்.

    Bg 8.9 — எல்லாமறிந்தவர், மிகவும் பழமையானவர், கட்டுப்படுத்துபவர், அணுவைவிடச் சிறியவர், எல்லாவற்றையும் பராமரிப்பவர், எல்லா பௌதிகக் கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டவர், புரிந்துகொள்ள முடியாதவர், ரூபமுடைய நபர், சூரியனைப் போன்று பிரகாசமானவர், ஜட இயற்கையைக் கடந்த உன்னதமானவர் என்று பரம புருஷரை ஒருவன் தியானம் செய்ய வேண்டும்.

    Bg 8.10 — எவனொருவன், இறக்கும் தருவாயில், தனது உயிர் மூச்சை புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி யோக பலத்தினால், பிறழாத மனதுடனும் முழு பக்தியுடனும், பரம புருஷரை நினைப்பதில் ஈடுபட்டுள்ளானோ, அவன் நிச்சயமாக பரம புருஷ பகவானை அடைவான்.

    Bg 8.11 — வேதங்களைக் கற்றவர்களும், ஓம்காரத்தை உச்சரிப்பவர்களும், துறவில் சிறந்த முனிவர்களும், பிரம்மனில் நுழைகின்றனர். இத்தகு பக்குவத்தை விரும்புபவன் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறான். முக்தியடைவதற்கான இம்முறையை தற்போது நான் உனக்கு சுருக்கமாக விளக்குகிறேன்.

    Bg 8.12 — புலன்களின் எல்லா ஈடுபாடுகளிலிருந்தும் விடுபட்டிருப்பதே யோக நிலை; புலன்களின் எல்லா கதவுகளையும் மூடி, மனதை இதயத்திலும் உயிர்மூச்சை தலை உச்சியிலும் நிறுத்தி, ஒருவன் யோகத்தில் தன்னை நிலைநிறுத்துகிறான்.

    Bg 8.13 — இந்த யோகப் பயிற்சியில் நிலைபெற்ற பிறகு, ஓம் எனும் புனித பிரணவத்தை உச்சரித்து, பரம புருஷ பகவானை எண்ணிக் கொண்டு உடலை விடுபவன், நிச்சயமாக ஆன்மீக கிரகங்களை அடைவான்.

    Bg 8.14 — பிருதாவின் மகனே, பிறழாத மனதுடன் என்னை எப்போதும் நினைப்பவன், சுலபமாக என்னை அடைகிறான்; ஏனெனில், அவன் பக்தித் தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளான்.

    Bg 8.15 — பக்தியில் யோகிகளான மகாத்மாக்கள் என்னை அடைந்த பிறகு, முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த தற்காலிகமான உலகத்திற்குத் திரும்பி வருவதே இல்லை, ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்துவிட்டனர்.

    Bg 8.16 — ஜடவுலகின் மிகவுயர்ந்த லோகத்திலிருந்து மிகவும் தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே. ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தை அடைபவன் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை.

    Bg 8.17 — மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்களைக் கொண்ட காலம் பிரம்மாவின் ஒரு பகலாகும்; அவரது இரவின் காலமும் அது போன்று நீண்டதே.

    Bg 8.18 — பிரம்மாவின் பகல் தோன்றும்போது எல்லா ஜீவாத்மாக்களும் அவ்யக்த நிலையிலிருந்து தோன்றுகின்றனர். பின்னர், இரவு வந்தவுடன் அவர்கள் மீண்டும் அவ்யக்தத்துடன் இணைந்து விடுகின்றனர்.

    Bg 8.19 — மீண்டும் மீண்டும், பிரம்மாவின் பகல் வரும்போது, இந்த ஜீவாத்மாக்கள் தோன்றுகின்றனர், பிரம்மாவின் இரவு வரும் போது இவர்கள் அனாதரவாக அழிக்கப்படுகின்றனர்.

    Bg 8.20 — இருப்பினும், தோன்றி மறையும் இந்த ஜடத்திற்கு அப்பால், நித்தியமானதும் திவ்யமானதுமான மற்றொரு தோன்றாத இயற்கை உள்ளது. அத பரமமானது, என்றும் அழிவடையாதது. இவ்வுலகிலுள்ள அனைத்தும் அழிவடையும் போதும், அப்பகுதி அழிவதில்லை.

    Bg 8.21 — எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.

    Bg 8.22 — எல்லோரிலும் சிறந்தவரான, பரம புருஷ பகவானை களங்கமற்ற பக்தியினால் அடைய முடியும். அவர் தனது இருப்பிடத்தில் வசிக்கும் போதிலும், எங்கும் நிறைந்தவராக உள்ளார், மேலும், அனைத்தும் அவரினுள் அமைந்துள்ளது.

    Bg 8.23 — பரதர்களில் சிறந்தவனே, எந்த எந்த நேரங்களில் இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகி, மீண்டும் வருகிறான் அல்லது வராது போகிறான் என்பதைப் பற்றி நான் இப்போது உனக்கு விளக்குகிறேன்.

    Bg 8.24 — பரபிரம்மனை அறிந்தவர்கள், அக்னி தேவனின் ஆதிக்கத்தில், ஒளியில், பகலின் நல்ல நேரத்தில், வளர்பிறை உள்ள இரு வாரங்களில், சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களில், இவ்வுலகை விட்டுச் சென்று அந்த பரமனை அடைகின்றனர்.

    Bg 8.25 — புகையிலும், இரவிலும், தேய்பிறையிலும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களிலும், இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகிகள், சந்திரலோகத்தை அடைந்து மீண்டும் திரும்பி வருகின்றனர்.

    Bg 8.26 — வேதக் கருத்தின்படி, இந்த உலகிலிருந்து செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன—ஒன்று ஒளியில், மற்றது இருளில். ஒளியில் உடலை விடுபவன் திரும்பி வருவதில்லை; ஆனால் இருளில் உடலை விடுபவனோ திரும்பி வருகிறான்.

    Bg 8.27 — அர்ஜுனா, இவ்விரண்டு பாதைகளையும் அறிந்துள்ள பக்தர்கள், ஒருபோதும் குழப்பமடைவதில்லை. எனவே, எப்போதும் பக்தியில் நிலைபெறுவாயாக.

    Bg 8.28 — பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டை செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்று, இறுதியில் நித்தியமான உன்னத இடத்தை அவன் அடைகிறான்.

+18
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question